Thursday 16 April 2020

காய்ச்சல் காலம்

அவ்வப்போது பல குழந்தைகளுக்கு கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் என்று மருத்துவ உதவிக்கேட்டு வரும்போது விசாரித்துவிட்டு இயன்ற அளவில் உதவி செய்வது வழக்கம், அந்தக்குழந்தைகளின் உடல்நலனை தொடர்ந்து விசாரிப்பதும் வழக்கம், அப்படி கல்லீரல் செயலிழந்து போன குழந்தை ஒன்றுக்கு சென்னை குழந்தைகள் நல மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்ததில், தொடர்ந்து பராசிட்டாமல் மாத்திரைகள் கொடுத்ததன் விளைவாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறிந்து சரி செய்திருக்கிறார்கள்!

பல மாதங்களுக்கு முன்பு “காய்ச்சல் காலம்” என்ற தலைப்பில் காய்ச்சலை பற்றியும், இதுபோன்று பராசிட்டாமல் மருந்து மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் உபயோகிப்பது, விளைவுகள் பற்றி நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் மருத்துவ நண்பரிடம் கலந்தாலோசித்து எழுதியிருந்தேன், அதிலிருந்து சுருக்கமாக சில கருத்துகள்:
1. காய்ச்சல் என்பது வியாதியல்ல, அது வேறு உடல் பாதிப்பின் அறிகுறியே!

2. காய்ச்சல் என்பது உடல் அதிகபட்ச வெப்பம் ஏற்படுத்தி, பாதிப்பில் இருந்து தன்னைத்தானே மீட்டெடுக்கும் முயற்சியும் கூட

3. காய்ச்சல் கண்டால் அதன் காரணம் அறிந்து அதாவது, சளி, வயிற்றுப்போக்கு வேறு ஏதேனும் இருந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து அதற்கான சிகிச்சையை செய்ய வேண்டும்

4. பெரியவர்களோ குழந்தைகளோ, மருத்துவரை கலந்தாலோசிக்காமல் உடல்வலி, காய்ச்சல் என்று தன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மருந்துகளை எடுத்துக்கொள்வதையோ குழந்தைகளுக்கு தருவதையோ தவிர்க்க வேண்டும்!

5. பராசிட்டாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது அதிக கவனம் தேவை, குறைந்தது நான்கு மணி நேர இடைவெளிக்கூட இல்லாமல் அடுத்தடுத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதோ, 2-3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து உபயோகிப்பதோ காலப்போக்கில் கல்லீரலை பதம் பார்க்கும்!

6. நிறைய நீர் பருகி, அவ்வப்போது நீரினால் உடல்துடைத்து விட்டு சூட்டைத்தணிப்பது அவசியம்!

7. காய்ச்சல் நேரத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையே (ரசம், அரிசிக்கஞ்சி, இட்லி) எடுத்துக்கொள்ளுதல் நலம்!

8. முடிந்தவரை வெள்ளை சர்க்கரை, ரீபைண்ட் எண்ணெய் வகைகள், கடைகளில் கவர்களில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள், பிராய்லர் இறைச்சி வகைகள், குளிர்பானங்கள், மைதா, மற்றும் மைதா நிறைந்த பிஸ்கட், கேக், பரோட்டா வகையறாக்களை எப்போதும் தவிர்த்து விடுதல் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும்!

9. குழந்தைகள் வெளியே விளையாடினால் பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும், உங்களின் மேற்பார்வையில் வெளியே விளையாட விடுவதே நலம்

10.எந்நேரமும் கையில் மொபைல் போன்களை திணித்துவிட்டு,
தின்பண்டங்களை திணித்துவிட்டு, அல்லது டிவி முன் உட்கார வைத்துவிட்டு, பசித்தால் சுவிஃகி ஸோமட்டோ உபேரில் ஆர்டர் செய்துவிட்டு பசி போக்குவதெல்லாம் ஆரோக்கிய தலைமுறைக்கான அடையாளம் இல்லை!
வாழ்க நலமுடன்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!