Tuesday 29 August 2017

முரண்களின்_பரிணாமங்கள்



"ஓ...ஏக்கு லடுக்கிக் கோ
தேகா தோ ஹெசா லகா"
காற்றில் தவழ்ந்த கானம்
தட தடவென்ற தட்டச்சு வகுப்பில்
மறைந்து நின்று பாடிய
அவனின் குரலின் இனிமையில்
காதலாகி கசிந்துருகி ஓடியது


உன் பெயரின் அர்த்தமென்று
இந்தச் சின்னப்பெயருக்கு
ஒருபக்கக் கடிதமெழுதி
வாழ்க்கையின் வழிக்காட்டியென்று
நன்றியுரைத்துச் சென்ற
மற்றொருவன் வார்த்தைகளின்
கண்ணியத்தில்
அன்புப் பொங்கி வழிந்தது

தனியா போகாதே கண்ணா
என்று தனித்தப் பயணங்களில்
எப்போதும் கவலையுற்று
அவசர வேலைகளை ஒதுக்கி
ஓடிவந்து
வயிற்றுக்கு உணவும்
கருத்துக்குப் புத்தகமும்
வாங்கித் திணித்து
வழியனுப்பும் நண்பனின்
கருணையின் செயல்களில்
நட்பு சாமரம் வீசியது

பார்வையின் வீச்சில்
அவசரமாய் அள்ளிவிழுங்கி
கோர்த்த விரல்களை
பிரிக்கமுடியாமல் பிரித்து
சந்தித்துப் பிரிந்த
வேலைகளிலெல்லாம்
உன்னுடைய கண்களில்
ஆழ்ந்த காதல்
நிரம்பித் தளும்பியது

அவனாக நண்பனாக
யாரோவாக இருந்தபோதில்
அன்பும் பரிவும் தேடலும்
கண்ணியமும் கருணையும்
நிரம்பி வழிந்த
உன் ஆணினம்
காதலும் திருமணமுமென்ற
உறவுக்குள் நுழைந்தபின்
பெண்ணைப்
பொருளின் மாற்றாக
நினைத்துக் கசக்கியது

ஆயினுமென்ன
பூத்த பூ உதிர்வதும்
உதிர்வது உரமாவதும் போல
மாறுபாடுகளைத் தாங்கி
இடைவிடாது தோள்கொடுக்கும்
பெண்மையென்பது
மிஞ்சியிருக்கும்
இக்காலத்தின் முரணானது

அவள் கடக்கும் அவனின்
முகங்களும் பரிணாமங்களும்
எப்போதும் அவளைச் சாய்த்துவிடாது
உழல்வதல்ல உருகுவதல்ல
எழுவதே வாழ்க்கையென்ற
நம்பிக்கையும் தோற்றுவிடாது!!!
#முரண்களின்_பரிணாமங்கள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!