Tuesday 29 August 2017

யாருக்கோ வலிக்கிறது

சில நாட்களுக்கு முன்பு, ஒரு ஒன்பது வயது பெண்குழந்தை டெங்குக்காய்ச்சலால் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவளின் உடல்நலனுக்காக, இரத்ததானத்திற்கும், பணத்தேவைக்கும் பதவிவிட்டிருந்தேன்! இந்தக்குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக இன்று காலையில் செய்தி வந்தது! இருப்பினும் மருத்துவர்கள் அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்திருக்கிறார்கள்! ஏற்கனவே போட்ட பதிவை நீக்கி விட்டேன்!

உங்கள் பிரார்த்தனைகளே அந்தக்குழந்தைக்கும், ஏற்கனவே கணவனை இழந்துவிட்ட அந்தத் தாய்க்கும் தேவை! நிற்க
ஒன்பது வந்து பெண்குழந்தைக்கு, காய்ச்சலின் காரணம் தெரியாமல் ஏதோ மருந்துகள் கொடுத்து, பின் வீரியம் அதிகரிக்க, உறுப்புகள் பாதிக்க, மருத்துவமனையில் சேர்க்க, டயாலிஸிஸ் போன்ற வலி நிறைந்த சிகிச்சைமுறை வரைச்சென்றும், கடையில் வலிமிகுந்த மூளைச்சாவு என்று செய்திவரும்போது, அது கடும் மனஉளைச்சலைத் தருகிறது!
ஜனனம் ஒன்று இருந்தால் மரணமும் நிச்சயம்தான் எனினும், இளம் வயதில் குழந்தைகளின் பெரும்பாலான மரணங்கள் நிகழ்வது அலட்சியத்தாலும் அஜாக்கிரதையாலும் தானே? டெங்குவுக்கு காரணமான கொசுவை ஒழிக்க குறைந்தபட்சம் சுத்தத்தை மக்களும் அரசும் உறுதி செய்திருக்கிறார்களா என்றால், இல்லை! குப்பைகளை இந்த அரசு மறுசுழற்சி செய்கிறாதா, இல்லை, அது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறுகிறது, அவ்வளவே!

நிலவேம்பு குணமளிக்கிறது என்றால் அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏன் போதிய அளவில் அரசாங்கம் ஏற்படுத்துவதில்லை? ப்ரேக்கிங் நியூஸ் பார்க்கும் மக்களுக்கு ஆரோக்கியத்தைப் பற்றிய தேடலும் குறைந்துதான் போயிருக்கிறது! அரசாங்கம் ஏன் எல்லா மருத்துவமனைகளிலும் நிலவேம்பை கட்டாயப்படுத்துவதில்லை?
ஓ எம் ஆர் சாலைகளில் நாள்தோறும் விபத்துக்கள், அரசாங்கம் செய்வது என்ன, செப்டம்பர் ஒன்று முதல் எல்லோரும் அசல் லைசென்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான், புற்றீசல் போல் பெருகிக்கிடக்கும் வாகனங்களை, ஒவ்வொரு பெரிய சாலையிலும் ஒரேயொரு காவல்துறை அதிகாரி நின்றுகொண்டு என்ன செய்து சீர்படுத்துவார்??

ஓட்டைப்பேருந்து, லைசன்ஸ் இல்லா ஓட்டுநர், சில குழந்தைகளின் மரணம், பின்பு ஒரு கண்துடைப்பு நாடகம், நீச்சல் குளம், மின்விசிறிகள், மின்தூக்கிகள், டிவி பெட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள், சாலையில் தொங்கும் மின்சார கேபிள்கள், தூக்குமாட்டிக்கொள்ளட்டும் என்ற ரீதியில் ஊஞ்சலாடும் பல்வேறு ஒயர்கள், ஆக்ஸிஜன் இன்றி பறிபோகும் உயிர்கள், குண்டும் குழியுமாய் சாலையில் நிறைந்திருக்கும் மரண பள்ளத்தாக்குகள், பாலியல் வன்கொடுமைகள், ப்ளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகள், தலைக்கவசமின்றி, சீட் பெல்ட் இன்றி, ஓரே பைக்கில் பணத்தை மிச்சம் செய்ய நான்கு பேர்கள் என்று பிள்ளைகளை வைத்து சாகசப்பயணம் மேற்கொள்ளும் அப்பன்களாலும், ஆத்தாக்களாலும், வேடிக்கைப் பார்க்கும் அரசாலும் என்று இந்த நாட்டில் விபத்துகளாலும், நோய்களாலும் குழந்தைகளின் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன!

கொத்துக்கொத்தாய் மக்கள் செத்தாலும், எல்லாவற்றிற்கும் நிவாரணம் என்று மக்கள் வரிப்பணத்தை தன்னுடைய கையாலாகத்தனத்திற்கு எடுத்து நீட்டும் அரசாங்கம், ஒவ்வொரு மரணமும் வெறும் எண்ணிக்கையாக பார்க்கப்படும் நாட்டில் உயிர்களுக்கு மதிப்பில்லை, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கும் இன்றைய இந்த ஆட்சியாளர்களுக்கும் உருவமும் நிறமும் மட்டுமே வித்தியாசம், மற்றப்படி பதவி பணம் என்ற இரண்டிற்காகவும் எதையும் செய்கிறார்கள் ஆட்சியாளர்கள், யாருக்கோ வலிக்கிறது எனக்கென்ன என்று இருக்கிறோம் நாம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!