Tuesday 18 September 2012

வெற்றி வெகு தூரத்தில் இல்லை!!


கலங்காதிரு மனமே
ஏன் இந்த விரக்தி?
எண்ணங்களை - தீய
மனங்களை திருத்த
வேண்டும் உன் புத்தி!
உன் சிந்தனை சக்தி
இருக்கையில் ...
எதற்கு இந்த ஆயுத யுக்தி?

கலங்காதிரு மனமே

கடலைத் தேடி- தோழி
இந்த நதியோடி
சேரும் நேரமடி
வழியை அடைத்தவைகள்
அர்த்தமற்று போகுமடி..!
கலங்காதிரு மனமே

உச்சிக்கு செல்லும் சூரியனை
துன்ப மேகங்கள்
மறைத்திடும்..
மழை வரும் நேரம்!
பொறுத்திரு தோழா...
துன்பங்கள் விலகிடும்!
கலங்காதிரு மனமே

சுற்றும் பூமி
பாதை மாறுவதில்லை!
பொங்கும் கடல்
சற்றும் ஓய்வதில்லை!
உழைத்திடு நட்பே - ஒருநாளும்
சத்தியம் தோற்பதில்லை!
கலங்காதிரு உயிரே...!

உண்மை உறங்கவும்
உறவுகள் உதறவும்
வீதியில் விதி இறக்கவும்
சுற்றி நின்று இரக்கமற்றவர்கள்
கை கொட்டிச் சிரிக்கவும்
கலங்காதிரு காதலே..
உண்மை விழித்தெழும்
பொய்மை பொசுங்கிவிழும்
அன்பு மனம் தேடி வரும்!
கலங்காதிரு உறவே..!

சூல் கொண்ட மேகம்
மழை நீராக பிரசவிக்க
பூமி மகிழ்ந்திடும்!
நீ கொண்ட துன்பம்
கண்ணீராக பிரவாகிக்க
மன பாரம் குறைந்திடும்!
கலங்காதிரு கண்ணே!

அழுவதற்கு இனி கண்ணீரில்லை
சாய்ந்து கொள்ள ஒரு தூணுமில்லை
ஓய்ந்திருக்க இனி நேரமில்லை
துன்பங்களை கண்டு பயமில்லை
சாதிமத பேதமில்லை
இன மொழி பிரச்சனையில்லை
மனதில் கள்ளமில்லை
சிந்தனையில் துரோகமில்லை
வாழ்க்கையில் வஞ்சனையில்லை
கலங்காதிரு நட்பே....
வெற்றி வெகு தூரத்தில் இல்லை!!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!