Monday 29 February 2016

என்றாகிலும் விடியும்

மகாமகத்தில் உயிர்கள்
போனபோது வாய்மூடி
இருக்கச் சொன்னார்கள்

பத்திரிக்கை அலுவலகம்
கொளுத்தப்பட்டு ஊழியர்கள்
பிணமானபோதும்
பேருந்துகள் எரிக்கப்பட்டு
மாணவிகள் சவமானபோதும்
கண்மூடி நகரப் பணித்தார்கள்


பள்ளியில் பிஞ்சுகள் கருகியபோதும்
போலி மருந்துகளில்
ஏழைகளின் உயிர்கள்
சோதனைக்கூட எலிகளாக்கப்படும்போதும்
காதுகள் மூடி ஊமைகளைப்போல
விதிர்க்கச் செய்தார்கள்

உயிர் காக்கும் மழைநீர்
ஆழி வெள்ளமாய் அணையை
விட்டு வெளியேறி
உயிர்களை விழுங்கியபோதும்
சாராயப் போதையில்
மந்தைகளாய் மனிதர்கள் ஆனப்பின்பும்
இது இயற்கை என்று
வாய்ப் பேசி மரணங்களின்
எண்ணிக்கைக்கும் விலை நிர்ணயித்தார்கள்

இன்னமும் மிச்சமிருக்கிறது மீதேன்,
மரபணு மாற்றம்
அணுக்கழிவு
இன்னப் பிற திட்டங்கள்
கையெழுத்திட்டும் இடாமலும்,
எதையும் கேட்காமல்
புலன்கள் அறுத்து
வாழப் பழக்கினார்கள்

ஓட்டுக்கு மட்டுமே உயிர்
மிஞ்சட்டும் என்று பன்நெடுங்காலமாய்
விட்டு வைத்திருக்கிறார்கள்
மரங்கள் கொன்று காடழித்தாலும்
கஞ்சா செடிகள் மட்டும்
திடீரென்று முளைக்கும்
அதிசய நாட்டில்
வாழ்வது நம் கடன் வாழ்வோம்
என்றாகிலும் விடியும் என்ற
நம்பிக்கை ஒளியோடு!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!