Monday 29 February 2016

அரசு_ஊழியர்கள்‬!

#‎அரசு_ஊழியர்கள்‬!
சம்பளம் கேட்டு, பல வித கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது அரசு ஊழியர்கள் போராடுகின்றனர், இது போன்ற எந்த போராட்டத்திற்கும் மக்களின் ஆதரவு இல்லை, ஏன் என்று இனியாவது இவர்கள் சிந்திக்க வேண்டும்.

வோட்டு வாங்கி ஓடிப்போகும் அரசியல்வாதியை விட, தினந்தோறும் பல்வேறு வேலைகளுக்காக பல லட்சம் மக்கள் இவர்களைத்தான் நாடுகிறார்கள், வங்கிகளில், தபால் தந்தி அலுவலகத்தில்,
மாநாகராட்சி அலுவலகங்களில், மாவட்ட ஆட்சியர், தாசில்தார் அலுவலகங்களில், பதிவுத்துறை அலுவலகங்களில், மின் வாரியத்தில், பேருந்துகளில், இரயில் நிலையங்களில் என்று பல்வேறு இடங்களில் பரிவர்த்தனைகள் இவர்கள் மூலமே நடைப்பெறுகிறது!

இப்படி தினம் தினம் மக்களை சந்திக்கும் இவர்கள் மக்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள்?

படிக்காதவர்களிடம் ஆணவமாக, படித்தவர்களிடம், உன்னோடு பேசுவதே நான் உனக்கு செய்யும் உதவி என்ற ரீதியில்தான் பணி நடக்கிறது!
"இங்கே போ, அங்கே போ, நாளைக்கு வா, இன்னைக்கு முடியாது" இப்படி யாரையும் ஏக வசனத்தில் பலர் பேசி விடுகிறார்கள், "தன்மை" என்பதே வார்த்தைகளில் இருப்பதில்லை! கடமையை கண்ணும் கருத்துமாக செய்து, மக்களிடம் மரியாதையோடு பேசுகிற எத்தனையோ நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அப்படிப்பட்டவர்களால் தான் இன்னமும் நம் அன்றாடம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது!

எல்லா துறைகளிலும் உள்ள கடைநிலை ஊழியர் முதல் உயரதிகாரி வரை நேர்மையாய் இருக்க முடிவெடுத்துவிட்டால், எந்த அரசியல்வாதிகளும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது, இவர்களின் கூட்டமைப்பு ஒன்று பட்டு தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக போராட்டம் செய்வது போல், மக்களின் நலனுக்காகவும் தங்கள் துறை சார்ந்தேனும் இவர்கள் குரல் எழுப்ப வேண்டும்! தங்களை நாடி வரும் மக்களை மனிதர்களாக மதித்து நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை எந்த சுணக்கமும் காட்டாமல் நிறைவேற்ற வேண்டும்!

அப்படி செய்யத் தொடங்கும் நாளில், மக்கள் கூட்டமும் உங்களுக்காக உடன் வரும், இல்லையென்றால் நடு ரோட்டில் உங்களுக்கே அரசியல்வாதிகளால் தீங்கு நேர்ந்தாலும் கூட்டத்தோடு கூட்டமாய் மக்கள் மந்தைகளைப் போல் வேடிக்கைதான் பார்ப்பர்! ஏனெனில் இவர்களை மந்தைகளைப் போல் ஆக்கியதும், நடத்துவதும் நீங்கள்தானே?!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!