Monday 29 February 2016

மரணம்‬

இங்கே நாம் தூக்கத்திலிருந்து
எழுவதற்கும்
ஞானம் வந்து போதனை
செய்வதற்கும்
மறந்து விட்ட நீதியை
தேடுவதற்கும்
யாரோ ஒருவரின் மரணம்
தேவைப்படுகிறது!
********
விபத்தென்றால்
கண்ணீர்த்துளிகளும்
தற்கொலையென்றால்
ஆற்றாமைக் குமுறல்களும்
கொலையென்றால்
தற்காலிக கோபக் கனல்களும்
வடிகாலாகிறது நமக்கு
மற்றொரு மரணம் நேரும் வரை!
********
மனைவிக்குப் பின் மனைவியும்
கணவனுக்குப் பின் கணவனும்
பிள்ளைக்குப் பின் பிள்ளையும்
காதலுக்குப் பின் காதலும்
இப்படியே மரணங்களுக்குப் பின்
மரணங்களும் மரணிக்கின்றன
எஞ்சியிருக்கும் ஒவ்வொரு
வாழ்க்கையிலும்!
*********
அழைத்தாலும் வராதவரை
அழைத்து வரும்
சட்டென்று நிகழும்
ஒரு மரணம்!
*********
வாழ்வதற்கான
நூறு வருடங்களில்
இறப்பையெண்ணி
இறக்கப் போகும்
ஒரு நாளில்
வாழயெண்ணும்
உணர்வைத் தரும்
மரணம்!
************
மரணம் என்பது
மரணம் மட்டும்தான்
வாழ்க்கையல்ல!
*********
‪#‎மரணம்‬

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!