Monday, 29 February 2016

ஈகை என்பது பிறவிக்கடன்!

உதவி என்று கேட்டு வந்தவர் யாராய் இருந்தாலும் என் தந்தையும் தாயும் இல்லையென்று மறுத்ததேயில்லை, தமக்குரிய எல்லா சொத்தையும் உறவுகளுக்காக வேண்டாமென மறுத்து, வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தவர்கள், 'உன்னால முடியும் போது இல்லைன்னு சொல்லாதே, கொடுக்க முடிஞ்சா கொடுத்துட்டு, போய்கிட்டே இரு, ஒரு வார்த்தையைக் கூட எதிர்பார்த்து தேங்கி நிக்காதே, நாம எது செஞ்சாலும் சந்தோஷமா செய்யணும், மனசில்லாம எந்தக் காரியத்தையும் செய்யாதே, இந்த உலகம் தேவைகளுக்காக ஓடிக்கிட்டே இருக்கும், யார் தருவாங்களோ அவங்க பின்னாடி இந்த உலகம் ஓடும், ஒருநாள் கொடுக்க முடியாம போய்ட்டா, போற்றின வாய்கள் தூற்றும், ஒருத்தருக்கு உன்னால உதவி பண்ண முடியும்னா, அதுதான் உனக்கு கடவுள் கொடுத்த வேலை, அவ்வளவுதான், புகழ்ச்சிக்காக தேங்கி நின்னா முடியாத காலத்திலே திட்டறதையும் கேக்க வேண்டி வரும்'

இங்கே வெள்ள மீட்பு , நிவாரணப் பணிகளுக்குப்பிறகு, மனிதாபிமான செயல்களுக்குச் சென்று சேர்ந்து மனங்களுக்கு புத்துணர்வு தர வேண்டிய வெளிச்சம், வெற்று விளம்பரமாய் புகழ் என்னும் போதைக்கு ஊறுகாயாகிக் கொண்டிருக்கிறது!

ஒருவருக்கு உதவி செய்வதென்பது மனித நேயம், இதில் விளம்பரங்கள் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து!

இருப்பினும் குழுவாய் சேர்ந்தோ, தனிப்பட்ட முறையிலோ செய்யும் நல்ல காரியங்களை வெளிச்சம் இட்டு காட்டுவதால் பிறருக்கு ஒரு தூண்டுதலாய் அது இருக்கும்
என்றால், அதை நிச்சயம் நாம் செய்யலாம். ஆனால் எந்த இடத்திலும் செயலை மட்டும் சொல்லி நகர்ந்து விட வேண்டும், உதவிப் பெறுபவரின் விவரங்களை, அதை வெளியிடுவதால் அவருக்கு நன்மைப் பயக்குமெனில், அவர் அனுமதியளித்தால் மட்டுமே பகிர்தல் வேண்டும்!

இடது கைக் கொடுப்பதை வலது கை அறியாமல் செய்ய வேண்டும் என்ற கூற்றை முழுதும் பின்பற்ற முடியவில்லை என்றாலும், மேற்கூறிய வகையிலேனும் பின்பற்றலாம்!

ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், எப்போதும்
மனிதர்கள் கொடுப்பது, பெறுவது என்ற இரண்டையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டிய நிலையை காலம் கட்டாயம் ஏற்படுத்திக் கொடுக்கும், ஆகையால் கொடுப்பதால் நாம் கடவுளர்கள் அல்ல, பெறுவதால் நாம் பிச்சைக்காரர்களும் அல்ல, எந்த நிலையில் இருந்தாலும் நாம் மனிதர்கள் மட்டுமே!

ஈகை என்பது பிறவிக்கடன்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...