Monday 29 February 2016

விபத்து_மரணம்_அழுகை‬!

#‎விபத்து_மரணம்_அழுகை‬!
இப்போது ஒரு விபத்தைக் கடந்து வந்திருக்கிறேன், இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை! சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு சிக்னல் அருகே நான் பயணம் செய்த கால் டாக்ஸி வந்து நின்றது, நின்ற பொழுதில் "டொம்" என்று ஒரு பெரிய சத்தம், அதிர்ந்து போய்ப் பார்த்தால் வெறும் மயிரிழை வித்தியாசத்தில், நின்ற கால் டாக்ஸியின் இடது பக்கத்தில் வந்து நின்ற ஒரு ஹுண்டாய் வெர்னா காரின் பின்புறம் நசுங்கி, ஓர் இரண்டடி முன்னே சென்று நின்றது, அதிர்ஷ்ட வசமாக அந்த நேரம் எந்த ஒரு மனிதனும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சீறிப்பாயவில்லை, பாய்ந்திருந்தால் அங்கே உயிருக்கு நிச்சயம் உத்திரவாதம் இருந்திருக்காது!
"அரசாங்கப் பணியில்" என்று வாசகம் பொறிக்கப்பட்ட மிகப்பெரிய லாரியின் முகப்பு, ஓட்டுனரின் அலட்சியத்தால் முன்னின்ற காரின் பின்பகுதியை நொறுக்கி இருந்தது!
பதைப்பதைப்புடன் கீழே இறங்கி, பார்த்தப் போது, லாரி இடித்த வேகத்தில், காரின் உள்ளே அமர்ந்திருந்த குடும்பத்தில் என் மகன் வயதையொத்த சிறுவர்கள் ஒன்று போல இருவர் இருந்தனர், முன் சீட்டில் இருந்த குழந்தை இடித்துக் கொண்டதில் கையில் அடி, உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், மற்ற எல்லாவற்றையும் விட அந்தச் சிறுவன் வலியில் அழுதது இப்போதும் மனதை அழுத்துகிறது!
இன்றுவரை, பல்வேறு அரசியல் வன்முறைகளை, விபத்துக்கள் என்று நிகழும் கொலைகளைப் பார்த்துக் கடந்து வருகிறோம், பள்ளிக்குப் போகும் குழந்தைகள், பணிக்குச் செல்லும் தகப்பன்கள், அம்மாக்கள், வெளியே செல்லும் முதியவர்கள், சாலையைக் கடக்கும் விலங்குகள் என்று விபத்து யாரையும் எதையும் விட்டு வைப்பதில்லை!
பெரிதாய் வேண்டாம் சிறிதாய் ஓர் இடி இடித்து விழுந்தால் கூட மண்டையில் அடிபடும், மண்டையில் அடிபடுவது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்று எல்லா மகன்களுக்கும், தகப்பன்களுக்கு, கணவன்களுக்கு, காதலர்களுக்கும் தெரியும், இருந்தும் தலைக்கவசம் அணிவது அவர்களின் கௌரவத்துக்கு இழுக்கு, மண்டையில் உள்ள முடிக் கொட்டிப் போகும், மயிரா உயிரா என்று வரும்போது, அவர்களுக்கு மயிரே பெரிதாகத் தோன்றுகிறது, மயிர் இல்லையென்றாலும் கூட, தலைக்கவசம் அணிவதில் அவர்களுக்கு ஏதோ சங்கடம், சட்டென்று இவர்களின் தவறினால் சாலையில் விழுந்து மரணிக்க நேர்ந்தால், பழிக்கு ஆளானவன் மனநிலையையோ, இறந்தவனின் குடும்பத்தாரின் மனநிலையையும் சொல்லி மாளாது!
பணிக்குச் சென்ற உறவினர் ஒருவரின் மகனை அரசுப் பேருந்து மோதியதில் அவன் iஇறந்து போனான், அவன் அந்த ஒருநாளில் இறந்து விட்டான், எனினும் அந்தத் தகப்பன் என் மகன் இங்கே நடப்பான், இப்படித்தான் சிரிப்பான், அவனுக்கு இதுதான் பிடிக்கும் என்று ஆண்டுகள் பல கடந்தும் குழந்தையில் இருந்து அவன் இறப்புவரை நடந்த நிகழ்வுகளை மனதில் சுமந்து கலங்கும் கொடுமை நமக்குப் புரியாது!
சமீபத்தில் கூட, ஈரோட்டில் இருந்து வியாபாரத்துக்காகச் சென்னை வந்த இருவர், குடித்து விட்டு வாகனத்தைத் தவறான பாதையில் ஒட்டி, ஹோட்டலில் இரவு பணி முடித்து வந்த இளைஞன் ஒருவனை விபத்தில் கொலை செய்தனர், பணம் இருக்கும் அவர்கள் வழக்கில் இருந்து வெளியே வருவது எளிது, ஆனால் இறந்துப் போன இளைஞனின் தாயும் தந்தையும் ஆயுள் முழுக்க நினைவுகளின் சுமையில் கரைந்துதானே போவார்கள்? அந்தத் தாயின் அழுகையும் கண்முன்னே நிற்கிறது!
அழுகை வேதனையின் வெளிப்பாடு, எனினும் அது ஒருபோதும் வேதனையைத் தீர்ப்பதில்லை, இயற்கையின் முன்பு நாம் தோற்றுப்போகிறோம், ஆனால் நம்முடைய அலட்சியத்தினால், ஆணவத்தினால், நடத்தையினால், கவனக்குறைவினால் இயற்கைக்கு மாறாய் யாரோ ஒருவருடைய மரணத்திற்குக் காரணமாகிறோம், அல்லது மரணித்துப் போகிறோம், நாம் அழுகிறோம் அல்லது யாரையோ அழ வைக்கிறோம்!
ஒருவனுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்தால் தான் தர்மம் என்றில்லை, நீங்கள் கவனமாய்ச் சாலையில் செல்வதும் கூட இன்றைய காலகட்டத்தில் மாபெரும் அறம் அல்லது தர்மம் என்று கூடச் சொல்லலாம்!
சாலையில் விரையும்போது;
1. இருசக்கர வாகன ஓட்டிகள், அந்த வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் அளவில் மட்டுமே பயணம் செய்யுங்கள்!
2. ஓட்டுபவரும் பின்னிருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியுங்கள்!
3. உலகில் சிறந்த வாகன ஒட்டி நீங்களாகவே இருக்கக் கூடும், மற்றவர்கள் இல்லை, ஆதலால் கவனம்!
4. வேகம் விவேகம் அல்ல, நேரம் கழித்துப் போகலாம், வாழ்நாளில் மீதி நாட்கள் இருக்கும், விரைந்து சென்று நம்முடைய வாழ்க்கையையோ பிறருடைய வாழ்க்கையோ முடிக்க வேண்டாம்!
5. குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அவசியம், உங்கள் தலைகளை விட அவர்களின் தலைகள் மென்மையானவை!
6. பேருந்திலோ, ரயிலிலோ, ஆட்டோவிலோ பயணம் செய்தால் காசு விரையம் என்று, ஒரே பைக்கில் குடும்பத்தையே ஊர்வலம் போல நெருக்கி அழைத்துச் செல்லும் கணவன்கள் உண்மையில் கொலைகாரர்கள்! பணத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம், உயிர் போனால் மீட்க முடியாது!
7. எட்டுப் போட்டு, பத்துப் போட்டு லைசென்ஸ் வாங்கினால் போதாது, ரியர் வியு கண்ணாடி என்பது தலைவாரிக் கொள்ள அல்ல, பின்னே வரும் வாகனங்களைப் பார்த்து, சாலையைக் கடப்பதற்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்!
8. நீங்கள் உலக அழகனாகவோ அழகியாகவோ இருக்கலாம், இரண்டு பேருந்துகளின் இடையில், மற்ற வாகனங்களின் இண்டு இடுக்குகளில் புகுந்து உங்கள் சாகசத்தைச் சாலையில் காட்டாதீர்கள், மேடையில் காட்டுங்கள்!
9. உறங்கும் பிள்ளைகளை இருசக்கர வாகனத்தில் அமர்த்தி வைத்துக் கொண்டு பயணிக்காதீர்கள்!
10. இரவு பத்து மணிக்கு மேல் சிக்னலைப் பார்க்காமல் செல்லலாம் என்று கண்மூடித்தனமாக முன்னே செல்லாதீர்கள், ஏனெனில் முட்டாள்களின் உறவினர் பலர் உண்டு, அந்தப் பக்கம் இருந்தும் உங்களைப் போலவே மற்றொருவன் வரலாம், கவனம்!
11. வெறுமனே கால்களைத் தரையில் வைத்துக் கொண்டு ஆக்சிலேட்டரை அழுத்தினால் போதும் என்று மட்டும் தெரிந்து கொண்டு சாலையில் கடக்கும் பெண்களும் ஆண்களும் பயங்கரவாதிகளே, எப்படி வருவார்கள், எங்கே பிரேக் பிடிப்பார்கள் என்றே தெரியாது! இவர்களிடம் கருணைக் கொண்டு ஒதுங்கிச் செல்லுங்கள்!
12, சாலையின் ஓரத்தில் கோவிலைப் பார்த்தால் பக்திப் பரவசத்தில் அப்படியே பிரேக் போட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்ளாதீர்கள், கடவுளுக்கே உங்கள் செயல் பிடித்தம் இல்லை, பின்னே வரும் யாரோ ஒருவர் உங்கள் மண்டையில் போடலாம்!
13. பிரேக் பிடிக்காத லாரிகள், அலட்சியமான பேருந்துகள், யாரையும் மதிக்காத ஆட்டோக்கள், பைக்கில் விரையும் ஹீரோக்கள், பார்களில் குடித்து விட்டுக் கார்களில் விரையும் மைனர்கள் மாநகரில் அதிகம், சீட் பெல்ட் அணியுங்கள், நமக்கு நாமே துணை, சாலையில்!
இறுதியாக, யாரோ ஒருவரின் அழுகையை நினைத்துப் பாருங்கள், ஏதோ ஒரு மரணத்தால் அல்லது இழப்பினால் கண்ணீர் துடைக்கக் கூட ஒரு கரமின்றி அனாதைகளாக மாறும் குழந்தைகள், புத்திர சோகத்தில் பித்தாகும் மனிதர்கள் அதிகம், கொஞ்சம் கருணைக் காட்டுங்களேன்!
‪#‎சாலை_பாதுகாப்பு‬

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!