Thursday 16 May 2019

புற்றுநோய்

ஒரு சேனலில் நடிகை ஒருவர் “பல வண்ண நிறங்களிலான இந்த உணவுப்பண்டங்கள் புற்றுநோய்களுக்கான காரணிகள்” என்று உணர்ச்சிவசமாய் நடிக்கிறார், பின் மற்றொரு சேனலில் விளம்பர படத்தில் இதைக்குடித்தால்தான் ஆரோக்கியம் நிலைக்கும் என்று வேறு ஒரு வேடம் பூணுகிறார், “தமிழர்களின் நலம்” பேசி ஜல்லிக்கட்டு அரசியல் பேசிய நடிகர், கோக்கையோ பெப்ஸியையோ குடிக்க கோக்குமாக்காக பறக்கிறார், இப்படியே இன்னொரு தளபதி நடிகரும் ஒரு படத்தில் மூச்சிரைக்க கார்ப்பரேட் அரசியல் பேசி, இன்னொரு கார்ப்பரேட் விளம்பரத்தில் தண்ணீர் உறிஞ்சும் முதலைகளுக்கு சாதகமாக சாகசம் செய்கிறார்!
இந்த நடிப்புக்கு சற்றும் சளைத்ததில்லை நம் அரசியல்வாதிகளின் நாடகங்கள், எல்லோரின் வங்கிக்கணக்கிலும் பதினைந்து லட்சம் என்ற பொய் அரசியல், 2020 க்குள் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் வீடு என்று ஆட்சித்தொடர பொய்களை அணிவகுக்கிறது!

எப்படி இருந்தாலும், மரபணு வழியால், புகையிலையால், சுற்றுப்புறச்சூழ்நிலையால், மாறுப்பட்ட உணவு பழக்கத்தால், குப்பைகளை வயிற்றுக்கு திணிக்கும் கலாச்சாரத்தால், சாராயத்தால், போதை மருந்துகளால், உடல் உழைப்ப இல்லாமையால், சுகாதாரமின்மையால், அணுக்கதிர்களால் என்று நாள்தோறும் புற்றுநோய் நோயாளிகள் பெருகிக்கொண்டே போகிறார்கள், இந்திய புற்றுநோய் ஆராய்ச்சிக்கழகத்தின் கூற்றுப்படி, நாள்தோறும் 1300 பேர் இந்தியாவில் புற்றுநோயால் இறக்கிறார்கள், இந்த நிலையில்தான் தாமிர ஆலைகளையும், அணுவுலைகளையும், கப்பல் கழிவுகளையும் மருத்துவக்கழிவுகளையும் தமிழகத்தில் கொட்டுகிறார்கள், மக்களுக்காக போராட வேண்டியவர்கள், இதற்கெல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு மாற்றி மாற்றி கல்லா கட்டுவதையே வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு விட்டார்கள்!

மக்களும்கூட வாழ்க்கைமுறையை புற்றுநோய் நோக்கியே நகர்த்திக்கொண்டு போகிறார்கள், மாறிவரும் சூழ்நிலையில் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்ற உண்மையை எடுத்துச்சொல்லத்தான் யாருமில்லை, புற்றுநோய் பாதித்தப்பிறகே சில விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பிரபலமானவர்களிடம் இருந்து வருகிறது!

எது எப்படியோ, எந்த விளம்பரங்களிலும், யாருடைய நடிப்பிலும் மோசம் போகாமல் மூளையை ஆரோக்கியமாய் உபயோகித்து நலமுடன் வாழ வாழ்த்துகள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!