Thursday 16 May 2019

மதம் பிடித்த மனிதர்கள்

பள்ளியில் படித்தபோது நான் பார்த்த #விநாயக_சதுர்த்திகள் அமைதியான வழியில் நடந்திருக்கின்றன, கொண்டாட்டமாக பெற்றோருடன் சென்று எந்த கூட்ட நெரிசலின் பயமும் இல்லாமல் கடலில் சென்று கரைத்திருக்கிறோம், வெறும் களிமண்ணும் மிஞ்சிப்போனால் ஒரு தங்க நிறமும் தான், என்று காவி நிறம் கொண்டு ஒரு அமைப்பு தம்மை இந்து மத பிரதிநிதிகளாக அறிவித்துக்கொண்டு உள்ளே நுழைந்ததோ, அப்போதே இந்த நாட்டில் துரதிருஷ்டம் நுழைந்துவிட்டது!

ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும்போது என்று நினைக்கிறேன், முதன்முதலில் “யாரோ ஒருத்தன் பிள்ளையார் மேல் செருப்பெறிந்து விட்டான்” என்று கத்தி பின் அது முஸ்லீம் எறிந்துவிட்டதாக மாறியது, பள்ளி மாணவியாய் என் முஸ்லீம் தோழியுடன் ஒன்றாகவே நின்றிருந்தேன், இத்தனை வருடங்கள் கழித்தும் அதே தோழமையுடன் நட்பில் மாற்றமில்லாமல் பண்டிகைகளை ஒன்றாகவே கொண்டாடுகிறோம், ஆனால் களிமண் பிள்ளையாரை எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு செல்வது அன்றே நின்று போனது, கூட்ட நெரிசல் பயமா என்றால் இல்லை, ஊர்வலம் என்ற பெயரில் குடித்துவிட்டு, மேல் சாதி எனப்படும் நபர்கள் எல்லாம் மேலே அமர்ந்திருக்க, கீழ் சாதி என்று அவர்கள் ஒதுக்கி தள்ளியவர்கள் எல்லாம், “இந்துக்கள்” என்ற அவர்களின் பொய்யில், மூளைச்சலவையில் அவர்களை சுமந்துக்கொண்டோ அல்லது வாகனங்களின் முன்னே அராஐகமாய் நடந்துக்கொண்டோ, வழியில் எதிர்ப்படும் பெண்களிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டோ செல்லும்போது, “அடேய் கடவுளே, உன் கண்முன்னே தகாத செயல் செய்யும் இவர்கள் மனிதர்களே இல்லை, அவர்களின் பிரதிநிதி நீயென்றால் உனக்கும் இங்கே மரியாதையில்லை!” என்றே மத ஊர்வலங்களில் கலந்துக்கொள்வதே இல்லை! 

கடவுள் நம்பிக்கை என்பது வேறு, மத வெறி என்பது வேறு, வெறி வந்து பிறரை நிந்திப்பதோ, தகாத செயல்களை செய்து பிறரை வருத்துவதையோ செய்பவர்கள் உண்மையில் மனிதர்களே இல்லை என்னும்போது அவர்களை மதவாதிகள் என்று மரியாதை செய்வதும், அதற்காக ஒரு கூட்டம் பின்னே அலைவதும் ஒருபோதும் மதத்துக்காகவோ கடவுளுக்காகவோ இல்லை, வெறும் பணத்துக்காக மட்டுமே!

எந்த மதமாய் இருந்தாலும் சரி, உன் கடவுளுக்காக வா, உன் மதத்துக்காக வா, உன் உழைப்பை, நேரத்தை, உயிரைக்கொடு, ஒரு பைசா கிடையாது, சோறு கிடையாது, சாராயம் கிடையாது என்று சொல்லிப்பாருங்கள், அந்த இடத்தில் உண்மையில் பக்திக்காக சிலரே நிற்பார்கள், பிறகு அங்கே கலவரமும் நிகழாது, காண சகிக்காத காட்சிகளும் காண கிடைக்காது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!